அஞ்சறைப் பெட்டிக்குள்
அடைக்கலமான
அம்மாவின் சிறுவாடு....
பஞ்சாரத்துக் கோழிகளாய்
மாடப்பிறைக்குள்
அடைகாக்கப்பட்ட
முட்டை விற்ற சில்லரை...
திருப்பதிமலைக்கும்
தீர்த்த யாத்திரைக்கும்
மஞ்சள் துணியில் போட்ட
வேண்டுதல் முடிச்சு....
சுட்டித் தம்பியின்
சுற்றுலாக் கனவுகளோடு
மண்டை உடைக்கப்பட்ட
உண்டியல் புத்தன்....
அத்தனைக்கும்
மலர்வளையமாய்
கடற்கரையின்
வெயில் தின்ற மணற்பரப்பில்
திட்டுத்திட்டான வெறுமையோடு
உனக்கான காத்திருப்பின்
நெடுகிலும்
வாடாமல் உள்ளங்கைகளில்
நான் பத்திரப்படுத்திய
மலர்க்கொத்து....
மௌனசாட்சியாய்
கனக்கின்ற
என் இதயத்தோடு
சட்டைப்பைக்குள் இருந்து
துக்கம் அனுஷ்டிக்கும்
உனக்கான
என் பிறந்தநாள் பரிசு...
Monday, November 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment