"முரண்பாடு" என்றால் என்ன?
என்றாய்
என் கழுத்தைக் கட்டிக் கொண்டு...
"என்னை உப்பு மூட்டை தூக்கு"
என்று
ஒரு சர்க்கரை மூட்டை கேட்கிறதே
இது தான் என்றேன்...
*******************************
கையில் வைத்திருந்த குடையை
காற்றில் ஆட்டி விளையாடிக்கொண்டிருந்தாய்....
குடைக்குள் இருந்து கத்தியது
என் மனசு
"மெதுவா.. மெதுவா..
குடைராட்டினம் என்றால்
எனக்கு பயம்.."
என்று....
*******************************
நீ இன்னும் மாறவேயில்லை...
எதையாவதுகொண்டு வந்து தருவாய்
பிறகு திருப்பி கொடு என்பாய்...
சின்ன வயதில் மாங்காய்த் துண்டு
இப்பொழுதோ உன் மனசு..
ஒரு மாறுதலுக்காக
நீ கொடுத்த
முத்தங்களை எல்லாம் கேள்
திருப்பி கொடுத்துவிடுகிறேன்....
**************************************
உன் மனதை
என்னோடு ஒட்ட வைக்கச்சொன்னால்
நீயோ
உன் முகத்தை
ஊரில் எல்லாருக்கும்
ஒட்டிவைத்துவிட்டு போயிருக்கிறாய்....
*************************************
காதல்
ஒரு பொல்லாத கடல்...
இங்கே
அலைகள் ஒவ்வொன்றுமே
வலைகள் தைத்து வைத்திருக்கின்றன....
************************************
மோதிரங்களுக்காகவே படைக்கப்பட்ட
நான்காவது விரல் மாதிரி
உன் மாலைகளுக்காகவே
படைக்கப்பட்டது
என் கழுத்து.......
************************************
உன் பார்வைகள்
துருவியதும்
குளிர்ந்து உறைந்து விடுகிறதே
என் இதயம்....
இதற்கு பெயர் தான்
துருவப் பிரதேசமோ?
***********************************
என் கனவுகளில்
நீ வருவதற்காக
உன் கால்களில் கட்டிக்கொண்ட
கடிகாரத்தைத் தான்
"கொலுசு" என்று பெயர் வைத்து
அழைக்கிறது
இந்த புரியாத உலகம்.....
********************************
"கடவுள் வந்தால்
என்ன வரம் கேட்பீர்கள்?" என்றாய்...
"பெரிய மனசு" என்றேன் நான்..
தானதருமம் செய்யவா என்றாய்
புரியாதவளாய்...
உன் சிணுங்கல்,புன்னகை,கோபம்
என்று
நீ தந்து கொண்டேயிருக்கும்
உன் பரிசுகளை
நான் வேறு எங்கு வைப்பேன்....
******************************
உன் ஒருத்தியின்
ஊரில் மட்டும் தான்..
மலர்ச்செடிகளும்
கைகளில்
மாலைகளோடு காத்திருக்கின்றன...
*********************************
Monday, January 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வலைகள் வைத்திருக்கும் அலைகள் படித்தேன், அருமை
தங்களின் அன்றாட கவிதை அலைகளை வலைமனையில் விரிக்க விரும்புகிறோம்.
வெங்கட் .
Post a Comment